நிலத்தடியை கண்காணிக்கும் விசேட விமானம் மாலைத்தீவு சென்றது

by Staff Writer 09-07-2019 | 8:02 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலத்தடியை கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் மாலைத்தீவு நோக்கி இன்று புறப்பட்டுச் சென்றது. எனினும், இந்த விமானம் இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று (08) தெரிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட Basler BT-67 என்ற விமானம் ஸ்பெக்ட்ரம் எயார் ZS-ASN ரகத்திற்குரியது என்பதுடன், இதனை பயன்படுத்தி சுமார் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ளவற்றை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விமானம் மாலைத்தீவு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த விமானம் மும்பை நோக்கி பயணிக்கவிருந்த போதிலும், அவர்கள் தீர்மானத்தை மாற்றி மாலைத்தீவிற்கு பயணித்ததாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. பின்னர் ஷிஷெல்ஸ், பெம்பா ஊடாக தென்னாபிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.