சர்வதேச விமானங்களுக்கான  கட்டணங்களை குறைக்க அனுமதி

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை குறைத்து அறவிட அமைச்சரவை அனுமதி

by Staff Writer 09-07-2019 | 5:35 PM
Colombo (News 1st) சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் எரிபொருள், பயணிகளுக்கான வரி உள்ளிட்ட கட்டணங்களை அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைத்து அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, பிரதமர் அலுவலகம், சுற்றுலா அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தன. கடந்த வருடத்தில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாகவும், 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 98 வீதமான சுற்றுலாப் பயணிகள் சர்வதேச விமானங்களிலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 29 சர்வதேச விமான சேவைகள் வாரத்திற்கு சுமார் 300 தடவைகள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.