அவுஸ்திரேலிய குப்பைகளை மீளனுப்புகிறது இந்தோனேசியா

அவுஸ்திரேலியாவின் குப்பைகளை மீள அனுப்புகிறது இந்தோனேசியா

by Bella Dalima 09-07-2019 | 7:00 PM
இந்தோனேசியா 210 தொன் நிறையுடைய குப்பைகளை அவுஸ்திரேலியாவிற்கு மீள அனுப்பவுள்ளது. கழிவுக்கடதாசிகள் மாத்திரமே இருக்க வேண்டிய குப்பையில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களுடன் வீடுகளில் இருந்து வௌியேற்றப்படும் குப்பைகளும் காணப்பட்டதாகத் தெரிவித்து இந்தோனேசியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்வந்த நாடுகள் புதைகுழி தரைகளாகப் பயன்படுத்தும் தென்கிழக்கு ஆசிய நாடொன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய எதிர் நடவடிக்கை இதுவாகும். சுரபாயா நகரில் கைப்பற்றப்பட்ட 8 கொள்கலன்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்களுடன் வீட்டுக்குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். விசாரணைகளைத் தொடர்ந்து இந்த குப்பைகள் மீள அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட வேண்டுமென இந்தோனேசிய சுற்றாடல் அமைச்சு பரிந்துரைத்துள்ளது. இந்தோனேசியாவின் சுற்றாடலை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கடல்சார் வர்த்தக நிறுவனத்தினால் இந்தோனேசியாவிற்கு கழிவுகள் அனுப்பப்படுகின்றன. இதேவேளை, கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட குப்பைகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் கடந்த மாதத்தில் பிலிப்பைன்ஸ் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.