பூஜித், ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு

by Staff Writer 08-07-2019 | 9:25 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் குழாம் இன்று (8ஆம் திகதி) பெயரிடப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிகாரே, சிசிற டீ ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னான்டோ உள்ளிட்டோர் இந்த நீதியரசர் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் பிரதிவாதிகள் கடமைகளை நிறைவேற்றத் தவறியாகத் தெரிவித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.