வெனிசூலா ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாரென வெனிசூலா எதிர்க்கட்சி அறிவிப்பு

by Staff Writer 08-07-2019 | 3:45 PM
Colombo (News 1st) வெனிசூலாவில் தொடரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதி மதுரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாரென தம்மைத் தாமே நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கைடோ தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை பார்படோஸில் இடம்பெறவுள்ளதுடன் பேச்சுவார்த்தைக்கு நோர்வே மத்தியஸ்தம் வகிக்கவுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தை இடம்பெறும் தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கைடோவின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மதுரோ தரப்பிலிருந்து இதுவரை எவ்வித கருத்தும் வௌியிடப்படவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. வெனிசூலாவில் தொடரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, அங்கிருந்து 4 மில்லியன் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, வெனிசூலாவில் ஜூவான் கைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.