மியன்மாரில் பாலர் பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்

மியன்மாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: விரைவான விசாரணை கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 06-07-2019 | 6:31 PM
சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவானதும், வௌிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி மியன்மாரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மியன்மாரின் மிகப்பெரிய நகரான யங்கோனின் (Yangon) வடக்குப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் நிர்வாக தலைநகர் Naypyitaw-விலுள்ள தனியார் பாலர் பாடசாலையொன்றில் வைத்து சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு தழுவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியா என புனைப்பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுமி கடந்த மே மாதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் , விடயத்தைக் கையாளும் பொலிஸாரின் வேகம் மற்றும் தொழிற்திறன் குறித்து சமூக வலைத்தள பாவனையாளர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை இந்த வாரம் கைது செய்துள்ளதாக மியன்மார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான தருணத்தில் குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு விரைவானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் வௌிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாதெனவும், அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 6,000 பேர் வரை பங்கேற்றுள்ளனர்.