by Bella Dalima 05-07-2019 | 8:43 PM
Colombo (News 1st) இலங்கை மீதான அமெரிக்காவின் தலையீடு தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
Millennium Challenge Corporation, ACSA மற்றும் SOFA உடன்படிக்கைகளின் ஊடாக அமெரிக்க வலய செயற்பாடுகளில் இலங்கையை ஈடுபடுத்த முயற்சிப்பதாக பிரதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
திருகோணமலை மற்றும் கொழும்பிற்கு இடையில் காணிகளை கையகப்படுத்தி, பொருளாதார மார்க்கமொன்றை உருவாக்கியுள்ள கடற்பகுதியில் அமெரிக்க யுத்த கப்பல்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனினும், நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த செயற்பாட்டிற்கும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தற்போது வாக்குறுதியளித்துள்ளனர்.
நாட்டிற்குள் இவ்வாறான எதிர்ப்பொன்றும் விவாதமொன்றும் ஏற்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் காணிகளை ஆராய்வதற்கு அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்றுக்கு அனுமதி வழங்கியது யார்?
அமெரிக்கர்களின் நோக்கம் என்ன?
பாதுகாப்பு உபாய மார்க்கங்கள் மற்றும் இயற்கை இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை மிக முக்கியமான பிரதேசங்களாகும்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு தேவை காணப்பட்ட போது இவர்கள் எங்கிருந்தார்கள்?
காணி உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் திடீரென ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கான காரணம் என்ன?
இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்பதை யாவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தாய் நாட்டின் சுதந்திரத்தை குறுகிய நோக்கங்களுக்காக காட்டிக்கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராகியிருக்கின்ற போதிலும், நாட்டு மக்கள் இவற்றை கடுமையாக எதிர்க்கின்றனர்.
அனைத்து நாடுகளுக்கும் உதவிகள் தேவை என்பது அனைவரும் ஏற்குமொரு விடயம். எனினும், சுதந்திரம் மற்றும் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்து அவற்றை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தமது இலக்குகளை நோக்கி பயணிக்கும் வெளிநாடுகளுக்கு எதிராக, எமது தலைவர்களுக்கு குரல் எழுப்ப முடியாதுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.