மட்டக்களப்பில் திருடப்பட்ட பொலிஸாரின் கைத்துப்பாக்கி மீட்பு

by Staff Writer 05-07-2019 | 8:03 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - புதூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி இன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். புதூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி பயணித்த இருவரை போக்குவரத்து பொலிஸார் தடுத்த போதிலும் கட்டளையை மீறி பயணித்தவர்கள் கீழே வீழ்ந்து விபத்திற்குள்ளாகிய சம்பவம் நேற்று (04) இடம்பெற்றது. இதன்போது, கிராம மக்கள் சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 20 பேர் வரை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, 15 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.