பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 24வருட கடூழிய சி​றை

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 05-07-2019 | 3:34 PM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 24 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தெரணியகல பிரதேச சபையின் தலைவராக செயற்பட்ட போது, வீதி சமிக்ஞைக்கான சான்றுப்பத்திரம் வழங்குவதற்காக 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் சம்பிக்க விஜேசிங்க மீது சுமத்தப்பட்டது. அதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் பிரதிவாதிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பிரதிவாதிக்கு 4 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளார். அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக்கொண்ட நபருக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 4 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20,000 ரூபா அபராதமும் விதித்த நீதிபதி, அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 4 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.