அரசியல் கட்சிகளின் விற்பனையைத் தடுக்க புதிய சட்டம்

அரசியல் கட்சிகளின் விற்பனையைத் தடுக்க புதிய சட்டமொன்றை உருவாக்க தீர்மானம்

by Staff Writer 05-07-2019 | 4:00 PM
Colombo (News 1st) அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் உரிமையாளர்கள் ​தேர்தல் காலங்களில் தமது கட்சிகளை அதிகூடிய தொகைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் கடந்த வருடங்களில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது, குறித்த கட்சிகளில் பதவிகளை வகிக்கும் நபர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் துரிதமாக சட்டம் உருவாக்கப்படவுள்ளது.