by Staff Writer 04-07-2019 | 11:04 AM
Colombo (News 1st) லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒரு போர்க் குற்றமாகும் என, ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது நேற்று (3ஆம் திகதி) மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குலில் 44க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
லிபிய தலைநகர் திரிபோலியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் குறைந்தது 130 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க அகதிகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் வௌியிட்டுள்ளன.
இந்நிலையில், லிபிய அகதிகள் முகாம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் போர்க் குற்றம் என, ஐ.நா அறிவித்துள்ளது.
இதனிடையே தாக்குதல் தொடர்பான அறிக்கை தமக்கு கோபமூட்டுவதாக அமைந்துள்ளதுடன், இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டேரஸ் தெரிவித்துள்ளார்.