ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 04-07-2019 | 4:49 PM
Colombo (News 1st) ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய, தற்போது முதல் ஊழியர்கள் கடமைக்கு திரும்புவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர ரயில் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் நதீர மனோஜ் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் போது இருதரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். எவ்வாறாயினும், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்ததாக ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர். பணிப்பகிஷ்கரிப்பு முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும், அலுவலக ரயில் சேவைகள் தாமதமடைந்தமையால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.