Colombo (News 1st) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணி விசேட ஏற்பாட்டு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இன்று நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சிசிர ஜயக்கொடி ஆகியோர் இன்று உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இலங்கையை அமெரிக்காவின் காலனித்துவத்தின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இருந்து திருகோணமலை வரை பொருளாதார வலயத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கு தற்போது கூட இணக்கம் தெரிவித்துள்ளனர். மிலேனியம் செலஞ்ச் நிறுவனம் என்ற பெயரில் அந்த உடன்படிக்கை இடம்பெறுகிறது. காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்கி மக்களிடம் இருந்து அதிக விலைக்கு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்த காணிகளை விற்பனை செய்வதற்கு எடுக்கும் உபாய மார்க்க முயற்சியே இதுவாகும்.
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
காணி சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அது இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.