அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து

அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து அணி

by Staff Writer 04-07-2019 | 7:43 AM
Colombo (News 1st) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் விளையாடுவதனை இங்கிலாந்து அணி நேற்று உறுதிசெய்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இங்கிலாந்து நிர்ணயித்த 306 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 45 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஜொனி பெயார்ஸ்டோ மற்றும் ஜேசன் ரோய் ஜோடி 18.4 ஓவர்களில் 123 ஓட்டங்களைப் பகிர்ந்தது. தனது 17ஆவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை எட்டிய ஜேசன் ரோய் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொனி பெயார்ஸ்டோ தனது ஒன்பதாவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்திசெய்து 106 ஓட்டங்களைப் பெற்றார். 31.4 ஓவர்களில் 206 ஓட்டங்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்துக்குள்ளானது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ட்ரென் பெளல்ட், மெட் ஹென்ரி, ஜேம்ஸ் நீசாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். வெற்றி இலக்கான 306 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாற்றத்துக்குள்ளானது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஹென்ரி நிகோல்ஸ் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஓட்டமின்றி ஆட்டமிழக்க மார்டின் கப்தில் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். நியூஸிலாந்து அணி 16.4 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு நான்காவது விக்கெட்டை இழந்தது. ஆறுதலளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடிய டொம் லதம் அரைச்சதமடித்தார்.