அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் இராணுவ சிப்பாயின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

by Staff Writer 04-07-2019 | 4:10 PM
Colombo (News 1st) அக்மீமன- மானவில பகுதியில் உள்ள கனிஷ்ட பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை அந்நபர் அபகரிக்க முயன்ற போது, அவர் மீது சிப்பாய் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். தனது பிள்ளை சுகயீனமுற்றுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பாடசாலைக்கு சென்றிருந்த நபர் ஒருவர், பலவந்தமாக பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் இராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். இதன்போது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். காலி - பிலான பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயது பிரதீப் உதய குமார என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றன.