கதிர்காமத் திருவிழா; 4 பாடசாலைகள் மூடப்பட்டன

கதிர்காமத் திருவிழாவை முன்னிட்டு 4 பாடசாலைகள் மூடப்பட்டன

by Staff Writer 03-07-2019 | 10:11 AM
Colombo (News 1st) கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு இன்று (3ஆம் திகதி) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கதிர்காமத்திலுள்ள 4 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில், கோதமீகம கனிஷ்ட வித்தியாலயம், செல்லக்கதிர்காமம் மஹா வித்தியாலயம், தெட்டகமுவ மஹா வித்தியாலயம் மற்றும் கதிர்காமம் தேசிய பாடசாலை ஆகியன மூடப்படுவதாக, ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும் விசேட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காலி, மாத்தறை, மொனராகலை, தங்காலை, புத்தளம் வரை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மேலும் பல பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஜூலை 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

ஏனைய செய்திகள்