விமான சேவை நிறுவன மோசடி:அறிக்கை கையளிப்பு

விமான சேவை நிறுவனங்களில் மோசடி: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 02-07-2019 | 6:57 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அணில் குணரத்ன உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியால் இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.