மும்பையில் 24 மணிநேரத்திற்குள் பலத்த மழைவீழ்ச்சி

மும்பையில் 24 மணிநேரத்திற்குள் பலத்த மழைவீழ்ச்சி

by Staff Writer 02-07-2019 | 2:04 PM
Colombo (News 1st) மும்பையில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு 24 மணித்தியாலத்துக்குள் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்தோடு, மழை மற்றும் வெள்ளம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றிரவு பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் பல ரயில் மற்றும் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை நேற்றிரவு மூடப்பட்டதால், மும்பையில் தரையிறங்கவிருந்த 54 விமானங்கள் அகமதாபாத், கோவா மற்றும் பெங்களூருக்கு திருப்பப்பட்டன. இன்றைய தினமும் மும்பை மற்றும் அதைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச அலுவலக நடவடிக்கைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், மும்பையில் வௌ்ளத்தினால் ரயில்கள் இரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.