ஹெக்டர் தர்மசிறிக்கு 3 வருட சிறைத்தண்டனை

பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு 3 வருட சிறைத்தண்டனை

by Staff Writer 02-07-2019 | 6:01 PM
Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு கொழும்பு கோட்டை பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன், குற்றவாளிக்கு 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட நிர்மாணப்பணிகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை ஈடுபடுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் 6 குற்றச்சாட்டுகளில் ஹெக்டர் தர்மசிறி குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதிவாதியை நீதவான் விடுவித்துள்ளார். 6 குற்றச்சாட்டுகளுக்கும் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்த நீதவான், சிறைத்தண்டனையை 3 வருடங்களாக அறிவித்துள்ளார். இதனிடையே, ஹெக்டர் தர்மசிறியின் சட்டத்தரணி, மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதாக எழுத்து மூலம் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார். அதற்கமைய, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.