சஜித் பிரேமதாசவை எவ்வாறு வெற்றிபெற செய்வதென அறிவோம்: மங்கள சமரவீர

by Bella Dalima 02-07-2019 | 8:28 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர இணையத்தளமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கடந்த 25 வருடங்களாக ஜனாதிபதியொருவர் தெரிவாகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி நிர்க்கதியாகியுள்ளது. 5 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காணப்பட்டாலும், தொகுதி ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாமற்போயுள்ளது என மங்கள சமரவீர அதில் கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இருக்க வேண்டும். அவர் வேட்பாளராவது மாத்திரம் போதாது வெற்றியடையக் கூடியவராகவும் இருக்க வேண்டும். அந்த பிரபலத்தன்மை சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகிறது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய தலைவரை நீக்குமாறு நாம் கூறவில்லை. சஜித் பிரேமதாசவே மேலாக உள்ளார். மறுபக்கம் எவர் வந்தாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எந்த ராஜபக்ஸ வந்தாலும் அது குடும்பத்திற்குள் நடத்தப்படும் சங்கீதக் கதிரை போட்டியாகவே அமையும். சஜித் பிரேமதாசவை எவ்வாறு வெற்றியடைச்செய்வது என்பதை நாம் அறிவோம். எனினும், ரணில் விக்ரமசிங்க, டீ.எஸ் சேனாநாயக்க ஆகியோரின் செயற்பாடுகளை எம்மால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான கட்சிகள் இனவாதம் நோக்கிப் பயணிக்கும் நிலையில், இந்த நாட்டின் நடுநிலை அரசியலுக்காக, ஜனநாயகத்திற்காக முன்நிற்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே எஞ்சியுள்ளது
என மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.