கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

by Bella Dalima 02-07-2019 | 4:28 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த திடீர் சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கடமை மற்றும் பொறுப்புகளை அலட்சியப்படுத்தியமைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறு சட்ட மா அதிபர் கடந்த வியாழக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் முன்வைத்த விசாரணை உள்ளடக்கங்கள் மற்றும் எழுத்து மூலமான சாட்சிகளை ஆராய்ந்ததன் பின்னரே சட்ட மா அதிபர் அவ்வாறு அறிவித்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விருவரும் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.