by Staff Writer 29-06-2019 | 3:37 PM
Colombo (News 1st) பாதாள உலகக் குழு தலைவரான மாகந்துரே மதுஷ் பதுக்கி வைத்திருந்த T 56 ரக துப்பாக்கியொன்று இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - கிம்புலாபிட்டிய வீதியின் தலுபொத்தஎல பகுதியில் குறித்த துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு மாகந்துரே மதுஷ் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
சோதனையின் போது கண்டுப்பிடிக்கப்பட்ட T 56 ரக துப்பாக்கி மேலதிக ஆய்வுகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக மாகந்துரே மதுஷ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.