by Staff Writer 29-06-2019 | 4:07 PM
Colombo (News 1st) அத்தியாவசிய சேவையாக ரயில் சேவை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ரயில்வே ஊழியர்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
உரிய நேரத்தில் வேலைக்கு சமூகமளிக்காமை மற்றும் தாமதமாக பயணிக்கும் ரயில்கள் தொடர்பிலும் இன்று முதல் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
ரயில்வே சேவையின் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையால் பிரதி வியாழக்கிழமைகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், நேற்று முன்தினம் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.