by Staff Writer 29-06-2019 | 9:03 PM
Colombo (News 1st) சீன பொருட்களுக்கு தீர்வை வரி அறவிடாதிருப்பதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் G - 20 மாநாட்டின்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், இருநாட்டு தலைவர்களும் இந்த இணக்கப்பாட்டை எட்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில், வர்த்தக கலந்துரையாடலை மீள ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா மற்றும் சீனா இன்று இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த கலந்துரையாடல் சிறப்பாக இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கலந்துரையாடலின் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
சீன பொருட்களை இறக்குமதி செய்யும்போது, மேலும் 300 பில்லியன் அமெரிக்க டொலர் தீர்வை வரியை விதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், ஒசாகா நகரில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சீன பொருட்களுக்காக மேலதிக தீர்வை வரி அறவிடப்படாது என்பதை ட்ரம்ப் உறுதி செய்தார்.
இரு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இந்த இணக்கப்பாடு, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை இடைநிறுத்த காரணமாக அமையலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவின் ஹூவாவி நிறுவனத்துடன் தமது நிறுவனங்கள் தொடர்ந்தும் வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஹூவாவி நிறுவனத்துடன் தமது நிறுவனங்கள் செயற்படுவதைத் தடை செய்வதற்கு இதற்கு முன்னர் அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது.
அமெரிக்காவின் இந்த செயற்பாடு சீனாவிற்கு பாரிய நிவாரணத்தை வழங்கும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.