மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 28-06-2019 | 3:50 PM
Colombo (News 1st) மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு தாம் தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை - புலஸ்திகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய நான்கு பேரின் பெயர் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தொலைபேசியூடாக அதுகுறித்து வினவியதாக ஜனாதிபதி கூறியுள்ளார். போதைப்பொருளால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தாம் தெளிவுபடுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உக்கிரமடைந்துள்ளதாகக் கூறியுள்ள ஜனாதிபதி , பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் இந்த பழக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களே இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதன் காரணமாகவே போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தண்டனைகளை அமுல்படுத்தாவிடின் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.