அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 28-06-2019 | 8:12 PM
Colombo (News 1st) அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டுகளில் இருந்து அனுமதி பத்திரங்களுடன் காணிகளில் வசிக்கின்றவர்களுக்கு வங்கிகளில் கடனைப் பெறவோ, காணிகளை பிள்ளைகளுக்கு வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது. அவ்வாறானவர்களுக்கு காணியின் முழுமையான உரித்தை வழங்கி, காணிகளை அபிவிருத்தி செய்யவே இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள் எனவும் சபை முதல்வர் சுட்டிக்காட்டினார். நாட்டின் காணி சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது அமெரிக்காவின் Millenium Challenge Corporation நிறுவனம், இலங்கைக்கு வழங்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முக்கிய செயற்பாடாகும். காணி சட்டங்களை மாற்றி, கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை பொருளாதார மார்க்கமொன்றை உருவாக்கி, அமெரிக்க இராணுவத்தினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாக, இது தொடர்பில் விமர்சிக்கும் தரப்பினர் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியும் எதிர்ப்பு தெரிவித்த காணி சட்டத் திருத்தங்களுக்கான சட்டமூலமே இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.