by Staff Writer 28-06-2019 | 4:00 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கு மாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கும் அரச காணிகளில் நீண்ட காலமாக காணி ஆவணமின்றி இருப்பவர்களுக்கும் 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை 89,530 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
எனினும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளாக வட மாகாணத்தில் அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தமது பெயர்களை பதிவு செய்யாத காணியற்றவர்கள் தமது பெயர்களை குறித்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
021 22 20 836 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.