சரத் என்.சில்வாவிற்கு எதிரான விசாரணையிலிருந்து நீதியரசர் சிசிர டி ஆப்ரூ விலகல்

by Staff Writer 28-06-2019 | 3:27 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டி ஆப்ரூ இன்று விலகியுள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பீ.பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதியால் கடந்த வருடம் வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு தொடர்பில் மருதானையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, விமர்சனம் முன்வைத்தமை குறித்து முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவிற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இரண்டு தடவைகளில் இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதியரசர்கள் குழாமிலிருந்து பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் விலகியமை குறிப்பிடத்தக்கது.