சொத்து விபரங்களை வௌியிடுமாறு மீண்டும் கோரிக்கை

சொத்து விபரங்களை வௌியிடுமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் மீண்டும் கோரிக்கை

by Staff Writer 27-06-2019 | 9:04 PM
Colombo (News 1st) சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் மக்கள் பிரதிநிதிகளை மீண்டும் கோரியுள்ளது. இது தொடர்பில், ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. இதன்போது, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்களுடைய சொத்துக்கள், பொறுப்புகள் பற்றிய விபரங்களை பகிரங்கமாக தளத்தில் பொது மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் மங்களா சங்கர் குறிப்பிட்டார். ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளியிட்டிருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் அளவிற்கு அதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார்களா என்கின்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கும் மக்கள் மத்தியில் மிகவும் பொறுப்புக்குரியவர்களாக தம்மை நிலைநாட்டுவதற்கும் தாம் பெற்ற வாக்காளர்களுடைய நம்பிக்கையை பேணுவதற்கும் தமது நன்மதிப்பை உயர்த்துவதற்குமாக அவர்கள் அத்தகவலை வௌியிட வேண்டும் என மங்களா சங்கர் வலியுறுத்தினார்.