ஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்

by Staff Writer 27-06-2019 | 7:59 AM
Colombo (News 1st) இன்று (27ஆம் திகதி) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானியில், போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று (26ஆம் திகதி) கைச்சாத்திட்டுள்ளார். அத்துடன், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சமிக்ஞை மேற்பார்வையாளர்கள் மற்றும் ரயில் மார்க்க பரிசோதகர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்காக, நாளைய தினம் (28ஆம் திகதி) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.