Colombo (News 1st) சொந்த நாட்டில் வாழ வழியின்றி அந்நிய நாட்டில் புகலிடம் தேடும் அனைவரது வாழ்க்கையும் விதியின் கரங்களில் பணயம் வைக்கப்படுகிறது.
அதில் மீள்வோர் உலகின் ஏதோ ஒரு மூலையில் அவரவர்க்கு தக்கபடி எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீள முடியாது விதியின் விளையாட்டில் வீழ்வோர் அடுத்தவருக்கு பாடங்களாகி விடுகின்றனர்.
மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதிக்கரையில் உயிரிழந்த சடலங்களாக ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு புதைந்து கிடக்கும் அந்தக் குட்டிப் பெண்ணையும் அவளது அப்பாவையும் கண்டு இன்று பலரும் கண்ணீர் வடிக்கின்றோம்.
இவ்விருவரின் மரணங்களுக்கு காரணமான அமெரிக்க குடியேற்றக் கொள்கையையும் அதிபரையும் வசை பாடிவிட்டு, மறந்து விடுகிறோம்.
ஆனால், அன்றாடம் இவ்வாறான புகலிடக்கோரிக்கையாளர்களின் மரணங்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சம்பவித்துக் கொண்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் மெக்ஸிகன் செய்தி ஊடகம் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில், ஆஸ்கர் அல்பெர்டோ மார்ட்டினெஸ் குடும்பம் கடந்த இரண்டு மாதங்களாக தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி கிடைக்கும் என காத்திருந்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் குடியேற அமெரிக்க அதிகாரிகள் கேட்ட சான்றிதழ்களைத் தங்களால் சமர்ப்பிக்க முடியாத சூழலில், தனது அமெரிக்கக் கனவை புறக்கணிக்க முடியாமலும் குடும்பத்தின் பொருளாதாரச் சுமை காரணமாகவும் தான் ஆஸ்கர் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் நுழையும் முடிவை எடுத்திருக்கிறார்.
அவர்களுடன் இன்னும் சிலரும் இந்தப் பயணத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆற்றைக் கடக்கும் போது முதலில் தன் மகளை அமெரிக்க கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் மீண்டும் நதியில் இறங்கியிருக்கிறார். ஆனால், குழந்தை வலேரியாவால் தன் தந்தை தன்னை தனியே விட்டு விட்டு நதியில் இறங்கிய செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தை, தந்தையைத் தேடி ஆற்றில் குதித்திருக்கிறது. இதைக் கண்டு திகைத்துப் போன ஆஸ்கர் மகளைக் காப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார். அதனால் தான் அவர்களது மரணப் புகைப்படங்களில், இறுதி நிமிடங்களிலும் கூட வலேரியா தன் தந்தையின் கழுத்தைக்கட்டிக் கொண்டிருப்பது புலனாகிறது.
இந்த மரணங்கள் குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்.
அந்த மரணங்கள் வருத்தத்திற்குரியது தான். இறந்து போன அப்பா, மகளை பார்க்கையில், அந்த இளைஞன் தன் மகளுக்கு மிக அற்புதமானதொரு தகப்பனாக இருந்திருப்பான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும், இது நிகழ்ந்ததற்கு அவர்கள் தானே காரணம். சட்டங்கள் கடுமையாக மக்கள் மீற முடியாதவையாக இருந்தால் அவர்கள் இப்படி சட்ட விரோதமாக நதிமார்க்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சித்திருக்க மாட்டார்கள் அல்லவா? இன்று அவர்களது உயிரிழப்பிற்கு காரணம் ஜனநாயகக் கட்சியினர் தான்
என்று அவர் தன் மீது வீசப்படும் விமர்சனக் கத்தியை அப்படியே எதிர்த்தாடி பூமராங் ஆக்கியிருக்கிறார்.
இறந்து போன சல்வடோர் இளைஞர் ஆஸ்கர் அல்பெர்டோ மார்ட்டினெஸின் அம்மா, ரோஸா ரெமிரஸ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டது;
என் மகனிடம் நான் பலமுறை சொன்னேன், வேண்டாம் அந்த அமெரிக்க வாழ்க்கைக் கனவு என. ஆனால் அவன் கேட்கவில்லை. காரணம் இங்கிருந்த சூழல் அப்படி. இங்கே வறுமையில் உழன்று கொண்டிருப்பதை விட எப்படியாவது அமெரிக்க மண்ணை மிதித்து விட்டால் போதும், கடினமாக உழைத்து அங்கு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விட்டால் வாழ்வில் நிம்மதியாக இருந்து விடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், என் மகனது அமெரிக்கக் கனவு இப்படிச் சிதையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை
என கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
ஆஸ்கருக்கு தன் மகள் வலேரியா மார்டினெஸ் மீது கொள்ளைப் பிரியம். அப்பா இல்லாமல் அவள் ஒரு நொடி கூட தனித்திருக்க மாட்டாள். அதனால் தான் மரணத்தால் கூட அவர்களைப் பிரிக்க முடியவில்லை போலும்
என ரோஸா ரெமிரஸ் கூறுவதைக் கேட்கையில் எமக்கும் கண்ணீர் வருகிறது.
எவ்வாறாயினும், இப்படியொரு சம்பவம் இனி எவருக்கும் நடக்கக்கூடாது என மனம் கனத்துப்போகிறது.