சஹ்ரானின் மனைவி கல்முனை நீதிமன்றில் ஆஜர்; தொடர்பிலிருந்தவர்கள் குறித்து தகவல் வழங்கினார்

by Staff Writer 26-06-2019 | 5:24 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். கல்முனை நீதவான் ஐ.எல். ரிஸ்வான் முன்னிலையில் மொஹம்மட் சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். எனினும், சந்தேகநபர்களிடம் மூடிய அறையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன்னர், தங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் தன்னுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் குறித்து பல விடயங்களை சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன் பின்னர் சந்தேகநபர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலில் பிரதான சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் மனைவி உள்ளிட்ட மூன்று பேரும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கல்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்