பன்னாட்டு முறிகளூடாக 2 பி. அமெரிக்க டொலர் கடன்

நாட்டுக்கான பன்னாட்டு முறிகளூடாக இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்

by Staff Writer 25-06-2019 | 2:24 PM
Colombo (News 1st) நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் விநியோகத்தின் ஊடாக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது இலங்கை அரசு சார்பில், இலங்கை மத்திய வங்கி இந்த முறிகளை விநியோகித்துள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 5 வருடங்களில் செலுத்தும் வகையிலும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை 10 வருடங்களில் மீள செலுத்தும் வகையிலும் முறிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 5 வருடங்களில் நிறைவு செய்யப்படும் முறிகள் 6.6 வீத வட்டியிலும் 10 வருடங்களுக்கான முறிகள் விநியோகம் 7.8 வீத நிலையான வட்டியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. முறிகள் விநியோகத்தினூடாக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொண்ட போதிலும், 6.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கான கேள்வி நிலவுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்த முறிகள் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முறிகள் விநியோகத்தனூடாக, சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் தமது நம்பிக்கை மற்றும் நீண்டகால அபிவிருத்தியை இலக்கு வைத்துள்ளமை ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கூட்டு முகாமையாளர்களாக பீ.ஓ.சி இன்டர்நெஷனல் சிட்டிகிராப், டொய்ஷே பேங், எச்.எஸ்.பீ.சி, ஜே.ஜி மோர்கன், எஸ்.எம்.பீ.சி நிகோ மற்றும் ஸ்டேன்டட் சாட்டட் வங்கி ஆகியன செயற்படுகின்றன. 2007ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச முறிகள் சந்தையில் இலங்கை 14ஆவது தடவையாக இந்தத் தடவை கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.