மாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி

தேனி மாணவிக்கு விஜய் ​சேதுபதி 8 இலட்சம் ரூபா நிதியுதவி

by Chandrasekaram Chandravadani 25-06-2019 | 4:23 PM
போலந்து நாட்டில் விண்வௌிக்கு செல்வதற்கு தெரிவாகியுள்ள தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு விஜய் சேதுபதி 8 இலட்சம் ரூபா வழங்கியுள்ளார். இஸ்ரோ சார்பில் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற விண்வௌி ஆராய்ச்சி கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதய கீர்த்திகா என்ற குறித்த மாணவி, மாநில அளவில் முதல் பரிசை வென்றிருந்தார். இதனையடுத்து, உதய கீர்த்திகாவை விண்வௌி ஆராய்ச்சி தொடர்பிலான கல்வியை முன்னெடுக்குமாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் ஊக்கப்படுத்தியுள்ளனர். அங்கு தனது படிப்பை முடித்த இவருக்கு தற்போது போலந்தின் அனலாக் வானியல் பயிற்சி மையத்தில் பிறநாட்டு விண்வௌி வீரர்களுடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச ரீதியில் 20 மாணவர்கள் பங்குபற்றும் குறித்த பயிற்சிக்கு இந்தியாவிலிருந்து உதய கீர்த்திகா தெரிவாகியபோதும், பொருளாதார ரீதியில் வசதியின்மையுடன் உள்ளமை குறித்து இந்து தமிழ் நாளிதழில் செய்தி வௌியாகியிருந்தது. இதனையடுத்து, பலர் உதவிகளை வழங்கிய நிலையில் உதய கீர்த்திகாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த விஜய் சேதுபதி சுமார் 8 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். விஜய் சேதுபதி படப்பிடிப்பு காரணமாக வௌியூரில் இருந்தமையால் அவரது அலுவலக ஊழியர்களே குறித்த பணத்தொகைக்குரிய காசோலையை வழங்கியுள்ளனர். இருந்தபோதும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜய் சேதுபதி, விஞ்ஞானி ஆவதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.