by Staff Writer 24-06-2019 | 5:10 PM
Colombo (News 1st) களுத்துறை மாவட்ட அரச வைத்தியசாலைகளின் அனைத்து வைத்தியர்களும் இன்று (24ஆம் திகதி) நண்பகல் 12 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைதியற்ற சூழல் காரணமாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிரான மனுவொன்றில் பொதுமக்கள் கையெழுத்திடும் நடவடிக்கை களுத்துறை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இன்று ஆரம்பமானது.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வருகைதந்த களுத்துறை நகர மேயர் அமீர் நஜீல் உள்ளிட்டோர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வௌியிட்டபோது அமைதியின்மை ஏற்பட்டது.
அமைதியின்மையை கட்டுப்படுத்தி பொலிஸார் களுத்துறை நகர மேயர் உள்ளிட்டோர் மற்றும் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளருடன் கலந்துரையாடினர்.
இதனிடைய களுத்துறை மாவட்டத்தின் அரச வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.