by Staff Writer 22-06-2019 | 7:53 PM
Colombo (News 1st) புகையிலை செய்கை 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் முற்றாக தடை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான மாற்றுப்பயிர் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலை பயிர் செய்கை சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது.
புகையிலை ஒரு விவசாய உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி, உள்ளூரிலேயே உருவாக்கப்படக்கூடியதாக இருந்த சுருட்டுக் கைத்தொழில்களுக்கு மூலப்பொருளாகவும் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் புகையிலை செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலை செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். குடாநாட்டின் தீவகம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் அதிகளவில் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் புகையிலை விவசாயத்தினை மேற்கொள்வோர் 10.87 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டிற்குள் புகையிலை செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.
புகையிலை பயிர் செய்கைக்கான மாற்றுப்பயிராக கற்றாழை செய்கையை மேற்கொள்ள முடியுமா என தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
எனினும், உடனடியாக மாற்றுப் பயிர் செய்கைக்கு செல்ல முடியாதுள்ளதாக புகையிலை செய்கையாளர்கள் கூறுகின்றனர்.