வாக்குமூலப் பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு

ஏப்ரல் 21 தாக்குதல்: பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் வாக்குமூலப் பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு

by Staff Writer 22-06-2019 | 4:23 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் வாக்குமூலப் பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வாக்குமூலப் பதிவின் முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக விசேட தெரிவுக்குழுவின் தலைவர் , பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்தார். தெரிவுக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், அன்றைய தினத்தில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளவர்கள் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அல்லது அதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகக் கருதப்படும் வாக்குமூல பதிவுகளின் போது அதனை ஊடகங்களூடாக நேரடியாக பகிரங்கப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும், ஏனைய அனைத்து சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.