by Staff Writer 22-06-2019 | 7:11 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய (21) போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி தகுதி பெறுவதற்கு திறமையுடன் அதிர்ஷ்டமும் கைகூட வேண்டும்.
இவ்வருட உலகக்கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை ரவுண்ட் ரொபின் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடுவதுடன், புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதே விதிமுறையாகும்.
அந்த வகையில் லீக் சுற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெறும் அணி இலகுவாக அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
எனினும், 4 போட்டிகள் மழை காரணமாக தடைப்பட்டு அதில் மோதவிருந்த அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதால் தற்போது சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருக்கிறது.
எனவே, மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றியீட்டினால் இலங்கை அணியால் அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்த முடியும்.
அவுஸ்திரேலியா 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைக் கைப்பற்றி முதலிடத்திலும் நியூசிலாந்து 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், இந்தியா 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்திலும் உள்ளன.
இலங்கை அணிக்கு கீழ் தரப்படுத்தப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எஞ்சியுள்ள தமது போட்டிகளில் வெற்றியீட்டினால் அது இலங்கை அணிக்கு சாதகமாக அமையும்.
எனினும், ஆறாமிடத்திலுள்ள பங்களாதேஷூக்கு 5 போட்டிகள் எஞ்சியிருப்பதால் அவர்கள் அந்த சகல போட்டிகளையும் வென்றால் அது இலங்கை அணிக்கு சவால் விடுப்பதாக இருக்கும்.
அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தத்தமது போட்டிகளில் தோல்வியடைந்தால் மாத்திரமே இலங்கைக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும்.