கைதிகள் கொலை: விசாரணைக்கு நீதிபதிகள் குழாம்

வெலிக்கடை சிறைக்கைதிகள் கொலை: மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை

by Staff Writer 21-06-2019 | 8:13 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் மற்றும் கைதிகளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை உள்ளிட்ட 33 குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் சிறைச்சாலையின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய இமதுவஹே இந்திக சம்பத் ஆகியோரே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். குற்றவியல் வழக்கு ஒழுங்கு விதிகளின் 450 ஆவது சரத்து மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 12 /2 ஆம் சரத்தின் பிரகாரம் நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரதிவாதியான இமதுவஹே இந்திக சம்பத் பொலிஸாரிடமிருந்து தப்பியிருப்பதாகவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதமர நீமதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார்.