ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம்

by Staff Writer 21-06-2019 | 9:15 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும், எவ்வித நிவாரணங்களும் அரசாங்கத்தினால் கிடைக்கவில்லை என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய பகுதியைச் சேர்ந்த க்ரிஷேன்டியா பெரேரா கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயங்களுக்குள்ளான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (20) உயிரிழந்தார். அவரின் மகனான டொக்டர் சனத் பெரேராவும் அவரின் மனைவி இந்திரா பெரேராவும் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்து இரண்டு மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த க்ரிஷேன்டியா பெரேராவிற்கு அரசாங்கத்தினால் எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டனர். இவ்விடயம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் கட்டான பிரதேச செயலாளரிடம் வினவியது.
இழப்பீடு கிடைக்க வேண்டியவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவற்றை சேத விபர அலுவலகத்திற்கு அனுப்பினோம். அங்கு தாமதமேற்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேத விபர அலுவலகத்திடமே அந்தப் பொறுப்புள்ளது.
என கட்டான பிரதேச செயலாளர் K.G.H.H.கிரிஎல்ல குறிப்பிட்டார்.