பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

9 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை

by Staff Writer 20-06-2019 | 8:50 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக உரிய குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சட்ட மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இதில் அடங்குகின்றனர். நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, கொழும்பு வடக்கு - பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு 3-க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு 4-க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜம்பட்டா பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தாக்குதல்களை தடுக்கவோ அல்லது குறைக்கவோ இந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையினால் குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட மா அதிபரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.