by Staff Writer 20-06-2019 | 9:04 PM
Colombo (News 1st) ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உபாய மார்க்கத்தை மாற்றியுள்ளதாகவும் அது இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் எனவும் இந்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த எச்சரிக்கையுடன் இந்திய பொலிஸ் திணைக்களத்திற்குள் பரிமாறப்பட்ட உளவுத் தகவல்கள் தொடர்பில் தாம் பரிசீலனை செய்துள்ளதாக NDTV தொலைக்காட்சி இன்று செய்தி வௌியிட்டுள்ளது.
சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ் வசமிருந்த பகுதிகள் சில அரசாங்கப் படைகளினால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் உபாய மார்க்கம் மாற்றப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, தமக்கு கிடைக்கும் தகவல்களை கருத்திற்கொள்ளாமல் இருப்பதில்லையென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்தார்.
அவ்வாறான தகவல்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.