தௌஹீத் ஜமாத் அமைப்புகளுக்கு தெரிவுக்குழு அழைப்பு

அகில இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு விசேட தெரிவுக்குழு அழைப்பு

by Staff Writer 20-06-2019 | 7:43 AM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (20ஆம் திகதி) பிற்பகல் கூடவுள்ளது. அகில இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று மாலை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தது. எனினும் ஊடகங்களுக்கு இந்த சந்திப்பின்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் எதிர்வரும் நாட்களில் தெரிவுக்குழு கூடும் தினங்கள் மற்றும் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்படவேண்டிய நபர்களின் பட்டியல் என்பன இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தொடர்பில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கும் ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று தீர்மானித்துள்ளது. அதற்கமைய, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளின்போது அது குறித்து வாக்குமூலம் வழங்குபவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தாது, இரகசியம் பேண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.