லிப்ரா க்ரிப்டோகரன்சி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

லிப்ரா க்ரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஃபேஸ்புக்

by Bella Dalima 19-06-2019 | 3:57 PM
ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரன்சி 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைத்தள பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் லிப்ரா கூட்டமைப்பை உருவாக்கி இருக்கும் ஃபேஸ்புக், தனது கூட்டமைப்பில் இதுவரை 28 கூட்டாளிகளை இணைத்திருக்கிறது. இந்த கூட்டமைப்பு புதிய Digital Coin சேவையை நிர்வகிக்கும் என தெரிகிறது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரன்சி Digital Coin, 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர, புதிதாக Calibra என்ற பெயரில் Digital Wallet போன்று இயங்கும் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. கலிப்ரா ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரன்சியை சேமித்து வைத்துக்கொண்டு, அவற்றை அனுப்பவோ அல்லது பயன்படுத்தவோ வழி செய்யும். கலிப்ரா ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸப் போன்ற குறுந்தகவல் சேவைகளுடன் இணைக்கப்படவுள்ளது. ஃபேஸ்புக் இந்த புதிய சேவையினை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்காதவர்களும் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தவுள்ளது. லிப்ரா பரிமாற்றங்களுக்கான கட்டணம் மற்ற சேவைகளை விட குறைவாகவே இருக்கும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. எனினும், சரியான கட்டண விபரங்களை வழங்கவில்லை. ஊழல்களில் சிக்கி பணத்தை இழப்போருக்கு அவரவர் இழக்கும் தொகையை திரும்பி வழங்குவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், Libra Association எனும் சுயாதீன வடிவமைப்பொன்றை உருவாக்கி, அதன்மூலம் இந்த  க்ரிப்டோகரன்சியை நிர்வகிக்க  ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதனால்,  க்ரிப்டோகரன்சி முற்றிலுமாக ஃபேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்களின் விருப்பமில்லாமல் Calibra ஃபேஸ்புக்குடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.