ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட உத்தேசம்

by Staff Writer 19-06-2019 | 7:40 AM
Colombo (News 1st) ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (19ஆம் திகதி) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளனர். ரயில்வே சேவை தரங்களில் காணப்படும் வேறுபாடுகளைக் களைவது தொடர்பில் அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இதுவரை அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தொழிற்சங்கத்தினருடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்பின்னர் நாளை ரயில்வே தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.