758 பேரிடம் வாக்குமூலம் பதிவு

குருநாகல் வைத்தியர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்த 758 பேரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 19-06-2019 | 5:40 PM
Colombo (News 1st) குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்த 601 பெண்கள் உள்ளிட்ட 758 பேரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். முறைப்பாடுகளை முன்வைத்துள்ள பெண்கள், கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனை மற்றும் கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலைகளில் விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பரிசோதனைகளுக்கு உபகரணங்கள் ஏதும் தேவைப்படும் பட்சத்தில், அவற்றை குறித்த இரண்டு வைத்தியசாலைகளுக்கும் வழங்குமாறு நீதிமன்றம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.