கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது

by Staff Writer 19-06-2019 | 8:45 PM
Colombo (News 1st) அம்பாறை - கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அரசியல் பிரமுகர்கள் சென்று இன்று பார்வையிட்டனர் . இதேவேளை, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் காரைத்தீவு பிரதேச சபைக்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைத்தீவு பிரதேச சபைக்கு முன்பாக பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட நால்வர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.