இயந்திர அரிவாள்களின் இறக்குமதியை நிறுத்துவது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 19-06-2019 | 1:54 PM
Colombo (News 1st) இயந்திர அரிவாள்களின் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான 1969 முதலாம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தைத் திருத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதற்கு இவை பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுவரை 82000க்கும் அதிகமான இயந்திர அரிவாள்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டாகும்போது இலங்கை காடுகளின் பரப்பை 32 வீதத்தால் அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு குறித்த இயந்திர அரிவாள்களின் பயன்பாடு அச்சுறுத்தலாக அமையும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களத்தின் வன நடவடிக்கைகளுடன் இணைத்துக்கொள்ளும் யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.