எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமானார்

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமானார்

by Staff Writer 18-06-2019 | 1:51 PM
Colombo (News 1st) எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார். எகிப்தின் மாமனிதராக வர்ணிக்கப்படும் மொஹமட் முர்ஸி தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஹூஸ்னி முபாரக்கின் பதவிநீக்கத்தின் பின் ஜனநாயக ரீதியில் எகிப்தின் ஜனாதிபதியாக முதன்முதலில் தெரிவுசெய்யப்பட்டிருந்த மொஹமட் முர்ஸி 2013ஆம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் அவர் சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இது ஒரு திட்டமிட்ட சதி என லெபனானின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் எகிப்திய ஜனாதிபதியின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் ம​றைவை பேரிழப்பாக கருதுவதாக துருக்கிய ஜனாதிபதி ரிசப் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.