மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினர்?

அமெரிக்கப் படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப நடவடிக்கை

by Staff Writer 18-06-2019 | 9:11 PM
Colombo (News 1st) அமெரிக்க இராணுவத்தின் 1000 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பென்டகன் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ஓமான் வளைகுடாவை அண்மித்த பகுதியில் இரண்டு எரிபொருள் கப்பல்களின் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு எரிபொருள் கப்பல்களுக்கும் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒரு மாதத்திற்கு முன்னர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கரையோரத்தை அண்மித்த பகுதியில் நான்கு கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது என காணொளியொன்றை வௌியிட்டு அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஈரான் குறித்த கப்பலின் உரிமை ஜப்பானுடையது என அமெரிக்கா தெரிவித்த கருத்தையும் நிராகரித்தது. எனினும், மேலதிக இராணுவப் படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பேர்ட்ரிக் செனகன் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரைப்படையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உலக நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யும் நோக்கில் பல்வேறு யுத்திகளை பயன்படுத்துகின்றது. இந்த விடயம் மிகத் தௌிவாகப் புலனாகின்றது. ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்குள் செல்வதற்கு அமெரிக்கா முன்னெடுத்த வழிமுறைகளை அவதானிக்கின்றபோது அவர்களாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஈராக்கில் செய்ததைப்போல ஈரானுக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதாக தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் நிறைவேற்று உறுப்பினர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்புலத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 2010ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் அமெரிக்க செனட் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பட்டது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் அமெரிக்காவின் சில வழிமுறைகளை மீளுருவாக்கம் செய்யுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தலையீடு செய்வதற்கு தேவையான வழிமுறைகளை திட்டமிட்டு அதனை அறிக்கையில் உள்ளடக்கி சமர்ப்பித்தனர். நியூவ் க்றேட் கேம் என்ற பெயரிலேயே அதனை அறிமுகப்படுத்தினர். புதிய பாரிய விளையாட்டு என்பதே அதன் பொருளாகும். அதனுள் சீனாவின் வழிமுறைகளாக இலங்கைக்குள் பிரவேசிப்பது உறுதிப்படுத்திக்கொண்டனர். அல்லது இந்தத் திட்டத்தை ஸ்தம்பிதமடையச் செய்யாதிருக்க செயற்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் சிந்தித்தனர். அதற்கமைய இராணுவத்தினர் ஊடாக இலங்கைக்குள் நேரடியாக பிரவேசிக்கக்கூடிய வழிமுறைகளை தேர்ந்தெடுத்தனர். இதனூடாக சீனாவினூடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுத்து நிறுத்த முடியும். இல்லையென்றால் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலப்பரப்பை மீண்டும் அமெரிக்கா கைப்பற்றிக்கொள்வதற்குத் தேவையான 3 உடன்படிக்கைகளுக்கு இலங்கையை இணங்கச் செய்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என கலாநிதி வசந்த பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.